Sunday 8 July 2012

சுய தொழில்கள்-33 கேன் வாட்டர் தொழில் ஒரு பார்வை

கேன் வாட்டர் தொழில் ஒரு பார்வை

 

 

சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான்.

சந்தை வாய்ப்பு!

நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.

முதலீடு!

இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம்.

மூலப் பொருட்கள்!

தண்ணீர்தான் முக்கிய மூலப் பொருள். தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை.

தயாரிப்பு!

கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும்.மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும்.

நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை.

இந்த டேங்கில் உள்ள தண்ணீர் ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ராவயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இதுதான் ஏழாவது நிலை.இதன்பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்றுவிடலாம்.

கட்டடம்!

இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.

மின்சாரம்!

21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.

இயந்திரங்கள்!

மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் - சாண்ட் ஃபில்டர், ஆக்டிக் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ஆர்.ஓ.யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க், ஒஸநேட்டர், புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும்.

வேலையாட்கள்!

இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேப்-பில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேப்-பில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை.

பிளஸ்!

மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ்.

மைனஸ்!

12,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6,000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ்.

லேப் பணிகள்!

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம்.

கட்டுப்பாடுகள்!

சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை. தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையில் உறை, வாயில் முகமூடியும் (விகிஷிரி) அணிந்து கொள்ள வேண்டும். இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். * ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். * தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. * தண்ணீர் பேக் (றிகிசிரி) செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர். * மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது.இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.

Saturday 7 July 2012

தேங்காய் தேகத்துக்கு நல்லது!


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.

சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.

தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.

தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் :

ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்:

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக..... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால் நாட்பட்ட வலிகளின் பாதிப்பு அதிகமாகலாம்....

வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

மூட்டு நோய்களோடு வாழ்தல் பற்றி மேலும் படிக்க இது இணைப்பு.

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.


இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும்
  • கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.
  • அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்.
  • கோபம் வரலாம்,
  • எரிச்சல் ஏற்படலாம்,
  • கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.
  • இவை எதுவும் இல்லையேல் 'இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை' என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.

இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே
  • தொடர்பாடலை குறைக்கிறது.
  • கலந்துரையாடுவது விட்டுப் போகிறது.
  • இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது.
  • இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன்.
  • இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது.
  • நம்பிக்கை இறுக்கமாகிறது.
  • உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்கினால்
  • அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.
  • விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும்.
  • மன விரக்தியும் ஏற்படலாம்
என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.


உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்மாறாக இருக்கிறது.
  • வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மறையான உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது.
  • வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.


பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர் என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

'பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில்
  • ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள்.
  • ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது
என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்' என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research குழவினர் சார்பில் Laura Leong கருத்து கூறியுள்ளார்.
உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா மற்றவரில் அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை.
  • மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும்.
  • பரிவு காட்ட வேண்டும்.
  • ஆறுதல் சொல்ல வேண்டும்.
  • ஒத்தாசை செய்ய வேண்டும்.


அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.


SOURCE: American Pain Society, news release, December 2011

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...


டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
 
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
 
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும்.
(சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
 
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும். இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
 
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
 
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.(அடையனும்..ஹூம்....நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)
 
நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5  நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
 
3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான். இந்த எமன்களிடமிருந்து நம்மை காப்பாற்ற இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் என இறையை வேண்டும் உங்கள்,
Engr.Sulthan.
 

 
 
 

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
'ஏடிஸ்' தென் மாவட்ட மக்களை அதிரவைத்த அதிபயங்கர கொசு! தற்போது திருப்பூர், கோவையிலும் தனது கைவரிசையை நீட்டியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோரை பாரபட்சமில்லாமல் கடித்து டெங்கு காய்ச்சலால் படுக்க வைத்திருக்கும் பயங்கர 'வியாதி'க்கான காரணகர்த்தாதான் இந்த ஏடிஸ் கொசு!
ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-
 
வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.
 
இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
 
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
 
இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.
அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.
 
அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம்.
 
கோவை, திருப்பூரில் தென் மாவட்டங்களை போல டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கூட இங்கு குறைவுதான். இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சுகாதாரத்துறை போத்தனூர் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மாநகர பகுதியிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. புகை மூலம் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
 
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் சகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு செந்தில்குமார் கூறினார்

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளுமை தரும் நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை

பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

பதநீரும் நுங்கும்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

வேர்குரு போக்கும் நுங்கு

கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.
நன்றி:தமிழ் போல்ட்ஸ்கை

அழகான கண்ணுக்கு 'கான்டாக்ட் லென்ஸ்' போட்டுருக்கீங்களா!!! கவனமா இருங்க...



 
ஆரோக்கியமான உணவு சாப்பிடாததால பார்வை குறைபாடு நிறைய பேருக்கு இருக்கு. அப்படி இருக்கிறவங்க யாரும் கண்ணாடி போட விரும்ப மாட்டீங்குறாங்க. ஏன்னா அது அவங்களோட அழக கெடுக்குதுன்னுதான். அதுக்கு பதிலா இப்ப புது டிரென்டா கான்டாக்ட் லென்ஸ் போடுறாங்க. கான்டாக்ட் லென்ஸ் போட்டா மட்டும் பத்தாது, அதை போடுறவங்க கவனமாவும் இருக்கணும்.

கான்டாக்ட் லென்ஸ் போடுறங்களுக்கு கண் எரிச்சல், கண் சிவப்பு நிறத்தில் மாறுதல், இதுலாம் எதுக்கு வருது? ஏன்னா அவங்க அதை போடும் போது முறையா எதையும் ஃபாலோ பன்றது இல்ல. இதுனால அவங்க கண் தான் பாதிக்கப்படும். ஏனென்றால் கண் ரொம்ப சென்ஸிடிவ், அதை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். கான்டாக்ட் லென்ஸயும், அதை போடும் போதும் என்னென்ன ஃபாலோ பண்ணணும்-னு பாக்கலாமா!!!

1. கான்டாக்ட் லென்ஸ் போடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். கழுவியதும் கையை ஒரு சுத்தமான துணியால் துடைத்துப் பிறகு தான் லென்ஸ் போடணும்.

2. கான்டாக்ட் லென்ஸ் எப்படி போடணும்-னு கொடுத்திருக்கிற இன்ஸ்ட்ரக்ஸன்-அ நல்லா படிச்சு, அது மாதிரி செஞ்சா லென்ஸ் ஆனது ரொம்ப நாள் வரும்.

3. மிகவும் முக்கியமான ஒன்று, லென்ஸ் போடும் முன்னும், போட்டு எடுத்து வைக்கும் முன்னும் அதை கொடுத்திருக்கும் மருந்தால் மறக்காமல் கழுவ வேண்டும். இந்த மருந்து லென்ஸில் பாக்டீரியா இருந்தால் அழித்து விடும். மேலும் கண்களில் எந்த ஒரு நோயும் வராது.

4. லென்ஸை கண்ட இடங்களில் வைக்காமல், அதற்குரிய பெட்டியில் வைக்க வேண்டும். மேலும் அந்த பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

5. லென்ஸை கழுவும் மருந்தின் உபயோகிக்கும் கால அளவை மறக்காமல் கவனிக்க வேண்டும். ஏனென்றால் மருந்தின் தேதி முடிந்தும் உபயோகித்தால் அது கண்களையே பாதிக்கும். ஆகவே அதன் தேதியை கவனிப்பது மிகவும் முக்கியம்.

6. இப்ப மார்க்கெட்-ல கான்டாக்ட் லென்ஸை கழுவுவதற்கு மருந்துகள் பல வந்துள்ளன. இதில் சரியான ஒன்றை தேர்வு செய்து உபயோகிக்கணும்.

7. குளிக்கும் போதும், நீச்சல் அடிக்கும் போதும் கண்டிபாக கான்டாக்ட் லென்ஸை கழட்டி வெக்கணும்.

8. மேப் கப் போடும் முன் கான்டாக்ட் லென்ஸை போட்டு தான் போட வேண்டும்.

9. மேக் கப் கலச்ச அப்புறம், கையை ஒரு ஆன்டி பாக்டீரியல் சோப்பால கழுவிட்டு, சுத்தமான துணியால கையை துடைச்ச அப்பறம் தான், கான்டாக்ட் லென்ஸை கண்ணுல இருந்து எடுக்கணும்.

10. கான்டாக்ட் லென்ஸை போட்டு வெயில்ல போகும் போது சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர் நேரா கண்ணுல படக்கூடாது. அப்ப கண்ணுக்கு சன்கிளாஸ் அல்லது தொப்பி போட்டு போக வேண்டும்.

நன்றி:போல்ட்  ஸ்கை

தெர்மோக்கோல்.... ஒரு விழிப்புணர்வு பார்வை!

தெர்மோக்கோல் என்னும் அரக்கன்...! ஒரு விழிப்புணர்வு பார்வை...


அன்பர்களே....

இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது. 


இதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..
இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.

இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.

முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..

நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.

மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற  இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். 

பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு ....  மக்கும் தன்மையே கிடையாது...

ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...
இவை அனைத்தும் பூமிக்கு கேடு...


வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில் 
அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக 
செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. 

முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி 
செய்யப்பட்டவையே...

இவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???

1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.

2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர 
பயன் தரும் பொருட்கள் செய்து...பணம் ஈட்டலாம்...

3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...
4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல்...
வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)
  
5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ,,
அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.

6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள் 
வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும். 

8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

9.நாமே ஒரு புனல் போன்று தகரத்தில் செய்து அதில் கரி கொண்டு நிரப்பி 
அதனுள் இதை எரிய விடலாம்...(கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால்)
(பார்க்க படம்.)

10.மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்க்-களுக்கு சென்று பார்க்கவும்...

விடியோக்கள்  பார்க்க

அன்பர்களே...பொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் ... பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்...ஆனால் இந்த தெர்மொகோல் 
பூமியில் ஒரு போர்வை போல்,,,படர்ந்து நம் இயற்க்கை அன்னையை  அழித்துக்கொண்டிருக்கிறது...இதை படிக்கும் அன்பர்கள்...சற்றே  சிந்தித்து...இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...

இவற்றை பாதுகாப்பாக அழிக்க வேறு ஏதாவது யோசனைகள் இருந்தால் கமெண்ட்-ல் பகிரவும்...இயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்... 

தமிழக பதிவர்களுக்கு ஒரு சின்ன எச்சரிக்கை...

அன்பர்களே..
தற்சமையம் தமிழகத்தில் மின்வெட்டு மிக கடுமையாக....
இருக்கிறது...இந்த சமயத்தில்...தடுப்புஊசி,,,மற்றும் திரவ மருந்துகள் ...
குளிர் பதனத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.....
சரியாக...குளிர் பதனம் கடைபிடிக்காத மருந்துகள்...வீனாகி,,
சரிவர செயல்படாமல் போகும் அபாயம் உள்ளது...

எனவே இவ்வகை மருந்துகள் வாங்கும்போது....
மருந்து கடைகள்...ஜெனரேட்டேர்மூலம் இயங்கும் 
கடையாக பார்த்து வாங்கவும்....
 கழுகிற்காக
J.நக்கீரன்

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, July 4, 2012, 21:58


கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.
இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.
இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

-இணையதள பத்திரிக்கையில் வெளியான செய்தி
இது குறித்து TimesNow வெளியிட்டுள்ள வீடியோ செய்தி


Wednesday 4 July 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-20

*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி' என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும் பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.

*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள் ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை என்பதுதான் விசேஷமே!

*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.

*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன் 2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம் அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில் எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

* உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் உள்ளன.

* ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

* ஏப்ரல் என்ற பெயர் "ஏப்பிரிரே' என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. "எல்லாம் இனிதே நிகழும்' என்பது இதன் அர்த்தம்.

* பாரதியார் "பாரதி' என்ற பட்டம் பெற்ற போது அவருக்கு வயது 11.

* ஆங்கிலப் பாடல்கள் எழுதத் துவங்கிய போது சரோஜினி நாயுடுவுக்கு வயது 13.

* அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கிய போது காமராஜருக்கு வயது 17.

* பல்லிகளில் 2,500 வகைகள் உண்டு.

* பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.

* பல்லிகள் மாதக் கணக்கில் உணவின்றி உயிர் வாழும் இயல்பு கொண்டது.

* வாழும் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை பல்லிகளுக்கு உண்டு.

* வீட்டுப் பல்லிகள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழும்.

*பத்திரிகைச் செய்தியாளர்களை நிருபர்கள் என்கிறோம். ஏன் தெரியுமா? முன்பெல்லாம் செய்தியாளர்கள் கடிதங்கள் மூலமே பத்திரிகைகளுக்குச் செய்திகளை அனுப்பி வந்தனர். வடமொழியில் "நிருபம்' என்றால் கடிதம் என்று பொருள். நிருபங்கள் எழுதி வந்ததால் செய்தியாளர்களும் நிருபர்கள் என அழைக்கப்பட்டனர்.

* வெட்டுக் கிளிக்கு கால்களில் தான் காதுகள் உள்ளன.

* நியூசிலாந்தில் காகமே கிடையாது.

* காகத்திற்கு காதுகள் கிடையாது. கண்ணின் பின்புறமுள்ள துளையின் வழியே கேட்கிறது.

* சவுதி அரேபியா நாட்டில் நதிகளே கிடையாது.

* சீனாவின் புனித விலங்காக வணங்கப்படும் விலங்கு பன்றி.

* உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான் தான்.

* எலி, கங்காரு ஆகியவை மிக குறைந்த அளவே தண்ணீர் அருந்துகின்றன.

* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவின் உயரம் 6 அடி. உடலில் பையை உடைய ஒரே விலங்கினம் கங்காரு. கங்காருவின் வால் 4 அடிக்கு மேல் நீளமானது. ஒரே தாவலில் இது 25 முதல் 30 அடிவரை தாண்டி விடும். இதன் குட்டிகள் பிறக்கும் போது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். கங்காருகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. கங்காருகளின் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
 
இணையத்திலிருந்து

சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...


பழமொழிகள்



  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடிப் பட்டம் தேடி விதை.
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

நாவடக்கம் - حفظ اللسان


ஆலிமா எம். வை. மஸிய்யா B.A (Hons)

அல்லாஹ் படைத்த உயிரினங்களுக்கு நாவு மிக முக்கியமானதொரு உறுப்பாகும். நாவின் அமைப்பும் அதிலுள்ள உணர்ச்சிகளும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. மற்ற உயிரினங்களை விடவும் (குறிப்பாக) மனிதனின் நாவின் உபயோகம் மிகவும் அதிகமாகும். ஏனெனில், மேற்கூறியவை தவிர, மனிதன் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் அதுவே திகழ்கின்றது.

மனிதனை மதிப்பிட உதவுவது

ஒருவன் தனது நாவைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவனது குணங்களை மதிப்பிட முடியும். ‘நல்ல மனிதன் என்ற மரியாதையை மக்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொடுப்பதில் நாவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவினாற் பிறரைத் துன்புறுத்தாதவனுக்குச் சிறந்த முஸ்லிம் என்ற பட்டத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே வழங்கியுள்ளனர்.
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் கூறுகின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என நபியவர்கள் கூறினார்கள் [நூற்கள்: புகாரி, முஸ்லிம்].

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அருள்மறை அல்-குர்ஆன்

நாம் மொழிகின்ற நன்மை, தீமைகள் அனைத்தையும் முறையே கண்காணிக்கக்கூடிய வானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதோ அல்லாஹ் கூறுகின்றான்,
“முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான் [அல்-அஹ்ஸாப்: 70, 71].

 இவ்வசனங்கள் தரும் படிப்பினைகளை நோக்குவோம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا . يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ . مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

“(மனிதனுக்கு) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும்போது (எழுதுவதற்கு) தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் ஒருவர் அவனிடத்தில் இருந்தே தவிர, எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை [காப்: 17, 18].

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்,
¨ இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.
¨ நேர்மையானவற்றை மட்டும் பேசுபவர்களது செயல்களை அல்லாஹ் சீராக்கி வைப்பான்.
¨ அத்தகையவர்களது (ஏனைய) பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.
¨ நா காக்கும் நல்லடியார்களை அல்லாஹ் தனது அன்புக்கும், அருளுக்கும் சொந்தமாக்கிக் கொள்கின்றான்.

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:

¨ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].
¨ யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் [அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].
¨ “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும் என்றனர். (மீண்டும்) அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, இதைத்தான் (பயப்படுகிறேன்) எனக் கூறினர். [அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]

நா காக்காவிடின் நரகமா?

நாம் சில வேளைகளில் நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அவ்வார்த்தைகளே நம்மை நரகிற் தள்ளிவிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது. [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி]

நடைமுறை வாழ்வில் நாவினால் செய்யப்படும் தீமைகள்

வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!

இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி எம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போம் (இன்ஷா அல்லாஹ்).