Monday 3 October 2011

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?உலக இதய தினம்


உலக இதய தினம் 2011

இதயம் காப்போம்!



மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.
மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.
இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.
இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:
பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.
இதற்கு "ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.
மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.



இதய நோய்: நவீன சிகிச்சை முறைகள்
 

பொதுமக்களிடம் தற்போது மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த குழாய்களில் அடைப்பு போன்ற பல நோய்கள் பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நவீன சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. நிபுணத்துவம் உள்ள டாக்டர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துவிட்டு, நல்ல சிகிச்சைகளை மேற்கொண்டால் இதய நோய் ஏற்படாமல் சுகமாக வாழலாம்.

சென்னை வடபழனியில் உள்ள விஜயா இதயநோய் சிகிச்சை நிறுவன இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.விஜயகுமார் இதுபற்றி கூறுகிறார்:-

பிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.

பொதுமக்கள் பெரிதும் அஞ்சுகிற பரவலான நோய் இதய நாள நோயாகும் (கரோனரி ஆர்டரி டிசீஸ்). இந்த நாளங்கள் தான் இதயத்துக்கு ரத்த சப்ளை செய்கிறது. பொதுவாக இந்த ரத்த நாளங்களின் உள்பகுதியில் கொழுப்பு படிவங்கள் உருவாகிற காரணத்தால் ரத்த நாளங்கள் சுருங்கி ரத்த ஓட்டத்தை தடை செய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்ததால் போதுமான அளவு ரத்த ஓட்டம் ஏற்படாமல் போய்விடுகிறது. அடுத்து ஆஞ்சினா பெக்டோரிஸ் அதாவது மார்பின் நடுபகுதியில் வலி ஏற்படுதல், இத்தகைய வலி சற்று ஓய்வு எடுத்தவுடன் போய்விடும். சில நேரங்களில் தாடை எலும்பு, கைகளுக்கும் பரவும். ஆஞ்சினா பெக்டோரிஸ் என்ற இந்த நோய், ரத்த நாளங்கள் மூலம் சப்ளை செய்யப்படும் ரத்தத்தின் அளவு குறையும் நேரத்தில் ஏற்படும்.

அடுத்து நிலையற்ற ஆஞ்சினா என்ற மூச்சு திணறல் உணர்வு அல்லது மூச்சு திணறல் வலி. 4-வதாக மாரடைப்பு, 5-வதாக திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் இதய ஓட்டம் தடைபடுதல் மற்றும் மரணம்.

இந்த நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் புகை பிடித்தல், நீரிழிவு, ரத்த கொதிப்பு, பரம்பரையாக ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது, மன அழுத்தம், மனக் கவலை, சோர்வு, உடற்பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், வயது போன்ற சிலவற்றை கூறலாம்.

ஈ.சி.ஜி.யில் காணப்படும் மாற்றங்கள், ஸ்டிரெஸ் டெஸ்ட், ஹோல்டர் (24 மணி நேர ஈ.சி.ஜி.) எக்கோ கார்டியோகிராபி, சி.டி. ஆஞ்சியோ (64 சிலைஸ்) போன்ற சோதனைகள் மூலம் இந்த நோய்களை கண்டறியலாம்.

ஆஞ்சினா பெக்டோரிஸ்
பொதுவாக இந்த பாதிப்பு மார்பின் நடுபகுதி, வயிற்றின் மேல்பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலியை ஏற்படுத்தும். மார்பின் கீழ் பகுதி மற்றும் வயிற்றின் மேல்பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாலோ அல்லது தண்ணீர் குடித்தவுடனோ போய்விட்டால் இது வாய்வு உபத்திரவம் என்று தவறாக முடிவு எடுத்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் இந்த அறிகுறிகளோடு வியர்வை, சோர்வு, தலைசுற்றல், மூச்சு திணறல் போன்றவையும் ஏற்படக்கூடும். சிலருக்கு எந்த வலியோ, அசவுகரியமோ ஏற்படாமல் மூச்சுவிட சங்கடமோ அல்லது எரிச்சலோ மட்டும் ஏற்படக்கூடும். இத்தகைய அசவுகரியம், எரிச்சல், பாரமான உணர்வு, வலி, அதிக வியர்வை, தலைசுற்றல் போன்றவற்றால் மூச்சுவிட சங்கடம் போன்றவை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டு சற்று ஓய்வுக்கு பிறகு, அல்லது உணவுக்கு பிறகு போய்விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய, சிகிச்சை பெறவேண்டிய அவசர அவசிய நிலையாகும்.
மையோ கார்டியல் இன்பார்க்ஷன் 
(மாரடைப்பு)

இதுவரையில் கூறப்பட்ட அறிகுறிகள் அரைமணி நேரத்துக்கு மேல் நீடித்தால் அது மாரடைப்பாக இருக்கக்கூடும். 30 சதவீத இத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள 50 சதவீதம் பேர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகளே இல்லாமல் சில நேரங்களில் பலவீனம், அதிக வியர்வை மட்டும் கொண்டு மாரடைப்பு ஏற்படக்கூடும். எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரிக்கு சென்று, எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ரத்த நாளங்களில் அடைப்புகள் அதிகமாக இருந்து இதய ஓட்டம் நின்றுவிட்டால் திடீர் மரணம் ஏற்படக்கூடும்.
ஏற்கனவே கூறப்பட்ட பரிசோதனைகளோடு "கரோனரி ஆஞ்சியோகிராபி டிஜிட்டல்'' என்ற சோதனை தங்க தர சோதனை என்று அழைக்கப்படும் ஆஞ்சியோ சோதனையாகும். இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகும். எத்தனை அடைப்புகள் ரத்த நாளங்களில் இருக்கிறது? எத்தனை சதவீத அடைப்பு எந்த இடங்களில் இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். நல்ல அனுபவம் மிக்க டாக்டர்களால் செய்யப்படும் இந்த சோதனை எத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்ய மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறது.
இதய நோயை முற்றிலுமாக குணமாக்கிவிட முடியாது. பிரதானமான மற்றும் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான்.
இத்தகைய நோய்களுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. பெரும்பான்மையான நோயாளிகளுக்கு மருந்துகளே நீண்ட காலத்துக்கு நல்ல பலனை தரும்.
ரத்த நாளங்களில் ஒன்று அல்லது 2 கடுமையான அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரத்த குழாய்கள் சுருங்காமல் இருக்க ஸ்டென்ட் என்று சொல்லப்படும் சிறிய டிïப்பை டாக்டர்கள் பொருத்திவிடுவார்கள். இது நல்ல பலனை தருகிறது.இதுதவிர இருதய ஆபரேஷன் அதாவது சிஏபிஜி ஆபரேஷன் செய்து கொள்ளலாம். இது நீண்டகாலத்துக்கு மிக சிறப்பான பலனை தரும். இதன்மூலம் மரண அபாயம் மற்றும் பல சிக்கல்கள் நீக்கப்படுகின்றன.
தடுக்கும் வழிகள்
இந்த நோய் வராமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகள் சாப்பிடுபவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டு ஸ்டென்ட் பொருத்தி இருப்பவர்கள், இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த நோய் இல்லாதவர்கள், நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களும் இந்த நோய் தங்களுக்கு வந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, உடல் பருமன் இல்லாமல் பார்த்து கொள்வது, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு அதிக கொழுப்பு (கொலஸ்டிரால்) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே முடியும். சிலருக்கு இந்த நோய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். இத்தகையவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். ரத்தக்கொதிப்பு, நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.
உணவு முறை
நமது உணவு வகைகள் நிச்சயமாக இதய நோய்களைத் தடுக்க பெரும் உதவிகரமாக இருக்கும். குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு வகைகள், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் இதய சிகிச்சை டாக்டர், உணவு வகை நிபுணர்களின் (டயடிசியன்) ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப நமது உணவு வகைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிமுறை என்னவென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு எண்ணையை அது எந்த எண்ணையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எண்ணையை பயன்படுத்தி சமைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை தவிர்க்க வேண்டும். ரிபைன்டு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். பழ வகைகள், காய்கறிகள் சாப்பிடும் அளவை அதிகரிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
நடை பயிற்சி தான் உடற்பயிற்சியில் மிக சிறந்ததாகும். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்தது. தினமும் காலையிலோ, மதியமோ, மாலையிலோ வெறும் வயிற்றில் இடைவிடாமல் 30 முதல் 45 நிமிடங்கள் வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும். இதய நோயாளிகள் தங்கள் உடற்பயிற்சி முறையை டாக்டரிடம் ஆலோசனை பெற்று வகுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பரிந்துரை செய்தால் இதய நாள நோயாளிகள் யோகா செய்வதும் பலன் அளிக்கும். மொத்தத்தில் இதயநோய் வராமல் தடுப்பது உங்களிடம்தான் இருக்கிறது.
 



நன்றி: இணையத் தமிழ் உலகம், மாலை மலர்

No comments:

Post a Comment